ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில், வோடஃபோன் நிறுவனம் ஏற்கனவே ரூ.2,500 கோடி வழங்கிய நிலையில், தற்போது ரூ.1,000 கோடி தொகை செலுத்தியதாக தொலைத்தொடர்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன் வருவாய் அடிப்படையில் அரசுக்குக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். அந்த வகையில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்குச் செலுத்த வேண்டும். அத்தொகையை ஜனவரி 23-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நிலுவையைத் தொகையை உடனடியாகச் செலுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதை ஏற்று பார்தி ஏர்டெல் நிறுவனம் தனக்கு இருக்கும் நிலுவைக் கட்டணத்தில் ரூ.10 ஆயிரம் கோடியைச் செலுத்தியது. இந்நிலையில், ஏஜிஆர் நிலுவைக் கட்டணமாக, வோடஃபோன் நிறுவனம் ஏற்கனவே ரூ.2,500 கோடி வழங்கிய நிலையில், தற்போது ரூ.1,000 கோடி தொகை செலுத்தியது.